×

கோவை ரவுடிகளுக்கு அடைக்கலம் தந்த ரவுடியை தேடி மும்பைக்கு தனிப்படை போலீசார் பயணம்

 

கோவை, மே 9: மதுரையை சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கோவை பீளமேடு அருகே துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கடந்த பிப்ரவரி மாதம் கும்பல் ஒன்று படுகொலை செய்தது. கோவில்பாளையத்தை சேர்ந்த ரவுடி கோகுல் அதே பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அருகே படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் ரவுடி கும்பல்களுக்கு இடையே சமூக வலைதள மோதல் காரணமாக படுகொலை சம்பவங்கள் நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த 2 சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளை ஒழிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக ரவுடிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி இதுவரை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக பெங்களூருவில் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவையில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது கேரளாவை சேர்ந்த டில்லி என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர் மும்பையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர தனிப்படை போலீசார் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த டில்லியை பிடிக்க மும்பைக்கு சென்று உள்ளனர்.

The post கோவை ரவுடிகளுக்கு அடைக்கலம் தந்த ரவுடியை தேடி மும்பைக்கு தனிப்படை போலீசார் பயணம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Coimbatore ,Madurai ,Sathyapandi ,Peelamedu, Coimbatore ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு